ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் மகிமை போற்றும் – திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது


தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.

ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர  ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.

திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய   தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இசை வடிவமைப்பில் நவீன ஒலியமைப்பையும், பாரம்பரிய பக்தி சுவையையும் நுட்பமாக இணைத்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும்  இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை  ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.

பாடலின் லிங்க் - https://youtu.be/VopbJrlnmJc

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது